தண்ணீரில் விளக்கொளிர்ந்து அதிசயம் நிகழ்த்திய திசையன்விளை சுடலை ஆண்டவர் தமிழகத்தில் காவல் தெய்வங்களுக்கு ஊர்கள் தோறும் பல்வேறு பெயர்களில் கோயில்கள் அமைந்துள்ளன. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்டங்களில் பிரதானகாவல் தெய்வமாக வணங்கப்படுவது சுடலை மாடசுவாமியை தான். இப்பகுதியில் இதன் கோயில்கள் இல்லாத கிராமங்களே இல்லை எனகூறலாம், காவல்தெய்வமாக சுடலை மாடசுவாமியை கருதினாலும், ஆண்டுதோறும் இக்கோயில்களில் நடைபெறும் கொடைவிழாக்கள், பெரிய ஆலயங்களுக்கு இணையாக சிறப்பாக நடந்துவருகின்றது. ஏனெனில் கையிலையில் சிவபெருமான் மற்றும் பார்வதியிடம், நான் பூலோகம் செல்லவேண்டும் என்றால் எனக்கு ஊட்டு போட்டு, கொடைவிழா நடத்தவேண்டும் என்று அடம்பிடித்துவரம்வாங்கி, சுடலை மாடன்சுவாமி பூலோகம் வந்த நிகழ்வை கூறுகின்றனர். இதனால் எவ்வளவு தொலை தூர ஊர்களுக்கு பிழைப்பு தேடிசென்றிருந்தவர்கள் கூட, குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குவந்து, இவ்விழாவில் பங்கேற்று சுடலை சுவாமிக்கு கிடாவெட்டி பொங்கலிட்டு படையலிட மறப்பதில்லை. தென்மாவட்டத்தில் பல்வேறுஊர்களில் சுடலை கோயில்கள் இருப்பினும், திசையன்விளை வடக்குத் தெருவில் அமைந்துள்ள சில நூற்றாண்டுகளுக் குமுற்பட்ட, சுடலை ஆண்டவர் கோயில் எல்லாவகையிலும் முற்றிலும்மாறுபட்டது. தற்போது பெரும்பாலான சுடலை மாடசுவாமி கோயில்கள் சுடலை ஆண்டவர் கோயில் என்றே அழைக்கப்படுகின்றது. இந்த பெயர் முதன் முதலாக சுவாமி உத்தரவுபடி சூட்டப்பட்ட முதன்மை கோயில் இதுவே ஆகும். பொதுவாக எல்லா ஊர்களிலும் அம்மன் கோயில் ஒன்று ஊரின் பிரதான கோயிலாகவும், அக்கோயிலின் வெளியிலோ, அல்லது அக்கோயிலுக்கு இணைகோயிலாகவும் தான், சுடலை மாடசுவாமிகோயில் இருப்பதுண்டு ஆனால் திசையன்விளை வடக்கு தெருவில் உள்ள இதன் சுமார் 1500க்கு மேற்பட்டவரிதாரர்களும் இந்த சுடலை ஆண்டவர் கோயிலை மட்டும் தான் பிரதான கோயிலாக கருதி வழிபாடு செய்து வருவது இதன் தனி சிறப்பாகும். சத்தியவாக்கு அடிப்படையில், பிடிமண் ஏதுவும் இன்றி, சுயமாக தோன்றியது இக்கோயிலாகும். இங்குள்ள கிணற்று நீரிலேயே இக்கோயிலுக்கு தீபம் ஏற்றப்பட்டுள்ள வரலாற்று உண்மை உள்ளது. கடந்த 10ஆண்டுகளுக்கு முன்னர் கூட கொடை விழாவில் இங்கு தண்ணீரில் விளக்கொளிர்ந்து அதிசயம் நிகழ்த்தி பரவசம் ஏற்படுத்தியது குறிப்படதக்கது.
இங்கு சுடலை ஆண்டவர், பேச்சிஅம்மன், பிரம்மசக்தி, சிவன் இணைந்த பெருமாள், முண்டன், முன்னடி ஆகிய தெய்வங்களுக்கு சிலைகள் அமைத்து பூஜை வழிபாடுகள் நடத்தினாலும் கூட, மற்ற கோயில்களில் இருந்து மாறுபட்டு, இக்கோயில் விழாவில் ஒருவர் மட்டுமேஆ ராதனைவந்து ஆடி, அருள்வாக்கு கூறி திருநீறு வழங்குவார். அம்மையும் நானே அப்பனும் நானே என்ற தத்துவத்தை எடுத்து கூறும்வகையில், கொடை விழாவின் பிரதான நாளில் விரதம் இருந்த சிறுமியர், மற்றும் பெண்கள் பவனியாக கொண்டுவரும் மஞ்சளை கொண்டு வைக்கப்படும், மஞ்சள் பானையை சுவாமிகுளிக்கும் அழகு மெய்சிலிர்க்கவைப்பதாகும். சுடலை கோயில்களின் கொடைவிழாவின் முக்கிய நிகழ்வு, நடுசாமத்தில் சுவாமி மையானவேட்டைக்கு சென்று வருவதேஆகும். வழக்கமாக எல்லா கோயில்களிலும் அந்த சமுதாயம் சேர்ந்த மையானங்களுக்கு மட்டும் தான் சுவாமி வேட்டைக்கு சென்றுவரும். ஆனால் இக்கோயிலில் சுவாமி மாற்று மதகல்லறை தோட்டம் வழியாக தான் சில நூற்றாண்டுகளுக்கு மேலாக வேட்டைக்கு சென்று வருகின்றது. இந்நிகழ்வு இவ்ஊரில் நிலவும் மத நல்லிணக்கத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. மேலும் சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரம்வரை சுவாமி மையான வேட்டைக்கு சென்று வருவதும் இங்கு மட்டும் தான். இதில் தூக்கி வீசப்படும் முட்டை பந்துபோல் குதித்துவரும், சுவாமி முட்டை விளையாட்டும் இங்குள்ள தனி சிறப்பாகும். சுடலை கோயில்களில் வழக்கமாக மகுடாட்டம், மேளம், வில்லிசை, ஆகியவை பிரதான நிகழ்ச்சியாகவும், கூடுதலாக கரகம், இன்னிசை, நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும், ஆனால் இக்கோயிலில் இந்த அனைத்து கலைநிகழ்ச்சிகளோடு கூடுதலாக இலவச கண்சிகிச்சை மற்றும் மருத்துவ முகாம்களும், ஆண்டு தோறும் நடந்துவருகிறது.இந்த கோயிலின் 80 வயது மூத்தநிர்வாகி ஒருவர், சுவாமி அருளாடிவரும் போது, எனக்கு கண்ணொளி தாப்பா என்று கேட்டாரம், அன்று இரவே சுவாமி அவரது கனவில் தோன்றி, நான் கைலையில் நோய் தீர்க்கும் வரம் வாங்கி வந்தவன், உனக்கு மட்டுமல்ல என் கோயில் விழாவிற்க்கு வரும் எல்லோருக்கும் நானே மருத்துவனாக வந்து நோய்களை தீர்ப்பேன் என்றாராம். அன்று முதல் தான் இக்கோயில் விழாவில் மருத்துவமுகாம்கள் நடத்தபடுவதாக கூறுகின்றார்கள். இங்கு 41நாட்கள் சுவாமி காலடியில்வைத்து பூஜிக்கபட்டு வழங்கப்படும் பச்சை கயிற்றை பக்தர்கள் பயபக்தியுடன் வலதுகையில் அணிந்து கொள்கின்றார்கள். இது கையில் இருந்தால் துஷ்டசக்திகள் தம்மை அனுகாது என்பதும், மதிய கொடைவிழாவின் போது சுவாமி வீசி ஏறியும் பழம் கிடைத்த, குழந்தை பேறு இல்லாத தம்பதிகளுக்கு அவ்வாண்டே குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், நீண்ட நாட்களாக திருமண மாகாத பெண்கள்,சுவாமியை வேண்டி, அம்மனுக்கு அணிவித்த பட்டு சேலையை பெண் பார்க்கவரும் போது அணிந்து கொண்டால் உடன்வரன் அமையும் என்பதும் நீண்டகாலமாக இங்கு தொடர்ந்து வரும் நம்பிக்கைகள் ஆகும்.
வழக்கமாக பெண்கள் கற்பகாலத்தில் சுடலை கோயில்களுக்கு சென்று வழிபாடுகள் செய்வதில்லை, ஆனால் இக்கோயிலில் இந்த பாகுபாடு எதுவும் பெண்கள் பார்ப்பதில்லை. இங்கு சுடலை ஆண்டவர் சிவகலையில் சாந்தசொருபமாக நின்று அருள் பாலித்து வருகின்றார். இக்கோயில் விழாவில் சாதி, சமயவேறுபாடுகள் கடந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது கூடுதல் சிறப்பாகும். தென் மாவட்டத்தில் தினசரி பூஜை நடக்கும் சுடலை கோயில்கள் ஒரு சிலதான் உள்ளது. அதில் இதுவும் ஒன்றாகும். ஒரு காலத்தில் ஏழ்மை நிலையில் பனைமரம் ஏறும் தொழிலாளியாக இருந்த இப்பகுதிமக்கள், பணம் படைத்த செல்வந்தர்களாக மாற இந்த சுடலை ஆண்டவர் வழிபாடு தான் காரணம் என இவ்வட்டார பகுதி மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை உள்ளதால், இந்த சுவாமியை வடக்குத் தெரு மஹாராஜா என்றே அழைக்கிறார்கள்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆறு நாட்கள் ஆவணி மாதம் முதல் ஞாயிறு துவங்கி வெள்ளி வரை 6நாட்கள் ஆவணி பெருங்கொடைவிழாவும், மற்றும் அனைத்து விசேஷ தினங்களிலும் சிறப்பு பூஜையும், தினமும் இரவு 7.30மணிக்கு பூஜையும் நடந்துவருகின்றது.
கட்டுரை
-எஸ்.ஏ.பொன்சேகரன்