வடக்குத்தெரு ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை என்ற ஊரில் அமைந்துள்ளது. ஸ்ரீ சுடலைஆண்டவர் இந்து மக்களின் காவல் தெய்வம், குலதெய்வமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிபடப்பட்டு வருகின்றார்கள். ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மிகப்பெரிய அளவில் கொடைவிழா நடத்தப்பட்டு வருகின்றது. திசையன்விளை மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து மக்களும் இந்த விழாவில் தவறாது கலந்து கொள்கின்றனர்.
ஸ்ரீ சுடலை ஆண்டவர் திருக்கோவில் ஆவணி பெருங்கொடை விழா நிகழும் மங்களகரமான 2025 ஆகஸ்ட் மாதம் 17 முதல் 22 தேதி வரை (ஆவணி 1 முதல் 6 வரை) வெகு சிறப்புடன் நடைபெற இருக்கின்றது. அனைவரும் வருகை தந்து விழாவினைக் கண்டு இன்புற்று இறையருள் பெற தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நாங்குநேரி பக்கம் உள்ள பெரும்பத்து என்ற ஊரில் வசித்துவந்த நிலச்சுவான்தாரான வீரகுமார சுவாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர். அந்த சமயத்தில் நாங்குநேரியில் ஒரு பெண்ணை இந்த பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சீரழித்து விட்டார். அந்த பெண் அவமானம் தாங்காமல் வைக்கோலில் தீயை வைத்து தானும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார். சாகும்போது அந்த குடும்பத்திற்கு சாபமிட்டு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் சீவலப்பேரி சுடலை முன் சத்தியம் செய்ய, அந்த குடும்பத்தை அழைத்தனர். அவர்கள் சாமிக்கு பயப்படவில்லை.
இதனால் அந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்தனர். (காவல் நிலையம் வந்த நேரம்) சுவாமிக்கு பயப்படாதவர்கள் போலீசுக்கு பயந்தனர். அதனால் அந்த ஊரை காலி செய்து விட்டு வீரகுமார சுவாமியும், அவரது பிள்ளைகளும் தனது சொத்துக்களையும், நிலபுலன்களையும் விற்று, அதில் கிடைத்த பணத்தை பெற்றுக் கொண்டு திசையன்விளையில் சில இடங்களை வாங்கினார்கள். அவர்கள் அம்மன் கோவிலுக்கு வடகிழக்கில் குடியேறினார்கள். நில புலன்களும், பணமும் அதிகமாக இருந்ததால் ஆவணங்குடி இருப்போர் என்ற பெயர் பெற்றனர். சில வருடங்களில் சீவலப்பேரி சுடலை சுவாமி தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.